திராவிட மொழிகள்

                                                                   திராவிட மொழிகள்




தென் இந்தியா முழுவதும் 19 கோடி அளவிலான மக்களாற் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் பட்டியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி பூகோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபபூர் ஹைதரபாத் மாவட்டங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது.

பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும்தான் மாநில மொழிகள் என்ற தகைமையையும், கிறிஸ்துவிற்கு முற்பட்ட இலக்கிய சரித்திரத்தையும் கொண்டவை. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகள் சம்பந்தமாக முறையான தகவல் எம்மிடம் இல்லை. இப் 19 மொழிகளுள் 10 இலட்சம் மக்களுக்கு மேற்பட்டோராற் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களாற் பேசப்படும் பிராகுவி வரும். தமிழ்நாட்டில் நீலகிரிப் பிரதேசம் போவோமானால் அங்கு தமிழ் மொழிக்கு மிகவும் நெருங்கிய மொழியான இருளம் உட்பட வடுகம் துடவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும் மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6வது மொழி ஒன்றைப் பேசும் மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசம் மக்களையும் சந்திக்கலாம். பட்டியலில் இல்லாத குறும்பமும் பணிகமும் நீலகிரிப் பிரதேசத்தில்தான் பேசப்படுபவை என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.
இப்போது 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்களாற் பேசப்படும் பிரதான நான்கு மொழிகளையும் பார்ப்போம். நான்கு மொழிகளுமே அவை பேசப்படும் மாநிலங்களில், மாநில மொழித் தகைமையுடன் திகழ்பவை. நான்கு மொழிகளிலும், கூடுதலான மக்களாற் பேசப்படும் மொழி, பாட்டிசைக்குகந்த மொழி என்ற புகழ் தெலுங்குக்கு இருந்தாலும், தமிழ் மொழியின் பல்வேறு தகைமைகள், தமிழே திராவிட மொழிகளில் தலைசிறந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. கன்னித் தமிழ், திராவிட மொழிகள் உருவாவத்தற்கு தளமாயிருந்த ஆதிமொழியிலிருந்து இலக்கண ரீதியாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் பெருமளவு மாற்றமில்லாதிருக்கின்றது.

இது மொழி வல்லுனர்கள் ஆய்வின் முடிவு. அதற்காக தமிழில் இருந்துதான் எல்லாத் திராவிட மொழிகளும் திரிவடைந்து உருவாகின என்று முடிவெடுப்பது மொழி அறிவு வளர்ச்சிக்கு எந்தவகையிலும் உதவமாட்டாது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இலக்கிய வளத்தைக் கவனத்திற் கொண்டு பார்த்தாலும் சமஸ்கிருதத்தைத் தவிர மற்றைய எந்த இந்திய மொழியும் தமிழுக்கு சமனாக வரமாட்டா. பூகோள ரீதியாக அதிக நாடுகளிற் பேசப்படும் திராவிட மொழியும் தமிழ்தான். திராவிட என்ற சொல் கூட கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பிரகிருதி, பாளி ஆகிய மொழிகளில் தமிழைக் குறிக்கும் தாமில, தாவிட ஆகிய சொற்களின் சமஸ்கிருத வடிவமே.

இந் நான்கு மொழிகளுமே துரதிஷ்டவசமாக, தமக்கென்று தனித்தனி எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டன. ஐரோப்பிய மொழிகளைப்போல் ஒரே எழுத்தையே இவையும் பயன்படுத்தியிருந்தால் ஒரு மொழியை மற்றவர் பயில்வதற்கு கூடுதல் வாய்ப்பு உண்டாகியிருக்கும். தமிழ், கிறிஸ்துவிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் பெற்றுவிட்டது. அதற்கு குறைந்தது ஐந்து நூற்றாண்டுகளின் பின்தான் தெலுங்கும், எட்டு நூற்றாண்டுகளின் பின் கன்னடமும் எழுத்துவடிவம் பெற்றன. கடைசியாக கிறிஸ்துவிற்கு பின் ஒன்பதாவது நூற்றாண்டில் மலையாளம் எழுத்துவடிவம் பெற்றது. தமிழைத் தவிர மற்றைய மூன்று மொழிகளுமே க, ச, ட, த, ப , ஆகிய ஐந்து வல்லின மெய் எழுத்துக்களை, சமஸ்கிருதத்தைப் போல் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரித்து 20 எழுத்துக்களாகக் கூட்டியுள்ளார்கள். உதாரணமாக, க ,வை எடுத்தால் அதை மய, மாய, பய, பாய , என நான்காகப் பிரித்துள்ளார்கள்.

இந்த எழுத்து அமைப்பு ஒற்றுமையை அவதானித்த என் மலையாள நண்பரொருவர் தமிழும் மலையாளமும் சமஸ்கிருதத்திலிருந்துதான் உருவாகியவை என்று வாதிட்டார். என்ன செய்வது மேலதிக சொற்களை இரவல் வாங்கினால் எழுத்துக்களையும் இரவல் வாங்கித்தானே ஆகவேண்டும். கணிசமானளவு சொற்கள் இம்மூன்று மொழிகளாலும்  வடமொழியிலிருந்து இரவல் வாங்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டின் ஆரிய மொழியான சிங்களமும் இந்த முறையிற்றான் வல்லினத்தை 20 எழுத்துக்களாக ஆக்கியுள்ளது. எழுத்து உருவத்திலும் தெலுங்கு கன்னட எழுத்துக்களைப் போலவே சிங்கள எழுத்துக்களும் உள்ளன. இது சிலவேளை சிங்கள எழுத்துக்கள் உருவாகும்போது தெலுங்கு நாயக்கர்மாருடன் சிங்கள மன்னர்களுக்கிருந்த உறவை எடுத்துக்ககாட்டுவதாக அமையலாம்.

திராவிட மொழிகளின் ஆரம்பம் சம்பந்தமாய் தெளிவான முடிவு ஏதும் தற்போது இல்லை. இந்தியா முழுவதும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதற்கு, இந்து நதிப் பள்ளத்தாக்கிலிருந்து அழிந்த நாகரிகத்தின் தடயங்கள், ஆதி நூலான 'இருக்கு" வேதத்திற் காணப்படும் திராவிடச் சொற்கள் ஆகியவை சான்றாக உள்ளன. வேறு எந்தக் குடும்பத்துடனும் தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பமாகவே இது உள்ளது. கங்கேரிய, துருக்கிய , மங்கோலிய ,மொழிக் குடும்பங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவினாலும் அதுகூட முறையாக ஆராய்ந்த முடிவாக இன்னும் வரவில்லை.

6000 வருடங்களுக்கு முன்பே பிராகுவி, ஓராவுண் இராஜமகால் ஆகிய மொழிகள் ஆதிமொழியிலிருந்து பிரிந்து தனிப் பிரிவாகிவிட்டன எனக் கணிக்கிறார்கள். படிப்படியாக ஏற்பட்ட பிரிவுகள் வட திராவிட, மத்திய திராவிட, தென் திராவிட என்ற முப்பெரும் பிரிவுகளை ஏற்படுத்திவிட்டது. மூன்று பிரிவுகளையும் இனி தனித்தனியே பார்ப்போம்.

வட திராவிட மொழிகள் 
மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை
பிராகுவி பாகிஸ்தான் 8 இலட்சம்
ஒராவுண் மத். பிரதேசம் 14இலட்சம்
இராஜமகால் பிகார், மே. வங்கம் 1.5இலட்சம்

மத்திய திராவிட மொழிகள் 
மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை
தெலுங்கு - 6.2 கோடி
சாவரம் - -
கோண்டி மத். பிரதேசம் 25 இலட்சம்
கொண்டா ஒரிசா 20,000
பெங்கு ஒரிசா 1,900
குயம், குவி ஒரிசா 9 இலட்சம்
கொலமி வட ஆந்திரா 1 இலட்சம்
நாகி வட ஆந்திரா 1,800
கப்பார் ஒரிசா 3,000
பரிஜி மத். பிரதேசம் 1.8 இலட்சம்

தென் திராவிட மொழிகள்
மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை
தமிழ் - 5.6 கோடி
மலையாளம் - 2.9 கோடி
கன்னடம் - 3.2 கோடி
துளு தென் கர்நாடகம் 15 இலட்சம்
இருளம் நீலகிரிப் பிரதேசம் 6,400
குடகம் நீலகிரிப் பிரதேசம் 1.2 இலட்சம்
துடவம் நீலகிரிப் பிரதேசம் 1,200
வடுகம் நீலகிரிப் பிரதேசம் 1.4 இலட்சம்
கோத்தம் நீலகிரிப் பிரதேசம் 1,500

- சி. மாசிலாமணி

Post a Comment

0 Comments